28.3.14

நிர்மலம்



சுவாதி முத்து 

மகரந்தத்தேன்

கறந்த பால் 

பௌர்ணமி நிலவு 

தாய்ப்பால் 

பனித்துளி 

சுத்த ஷட்ஜமம் 

ஓங்காரம் 

தமிழ் ...........

........................

பரிசுத்த பட்டியலில் 

தாயின் அன்பிற்கு 

இணையாக 

எதுவுமே இல்லை.................

12.3.14

நீயே நான்



தடயவியல் பொடிகளை 
தூவினால் தெரியும் என்னுடல் 
முழுக்க உன் ரேகைகள் 

மெம் டிஎன்ஏக்களில் உனது 
மூலக்கூறு முளைக்கும் 

பிளேட்லெட்டுகளில் உன் 
பெயர் தெரியும் 

கண்ணிமை மூடினாலும் 
கருவிழிக்குள் நீ இருப்பாய் 

ஆக்சிஜனும் மணக்கும் 
உன் சுகந்தத்தால் 

கவிதைக்கு கருவாய் 
சிலிர்ப்பிற்க்கு ஸ்பரிசமாய் 
புன்னகைக்கு பொருளாய் 
உணவிற்கு சுவையாய் 
உணர்விற்கு உயிராய் 

எல்லாமும் நீயே 

நீயே தான் நான் .......................

1.3.14

கையறு நிலை



மிராஸ்தாராக  இருந்து நொடித்து 
மளிகைக்கடையில் கணக்கு எழுதுபவர்கள் 

கடைவீதியில் கைக்குழந்தையோடு 
காதலியை கண்டவர்கள் 

நெருங்கியவர்களின் மரண நொடியில் 
கைபிடித்தவர்கள் 

உயிராக எண்ணிய நண்பனின் 
துரோகத்தை தாங்கியவர்கள் 

வாரக்கடைசியில் வெறும் பாக்கெட்டுடன் 
மகளுக்கு கிண்டர்ஜாய் வாங்க இயலாதவர்கள் 

உலகமென எண்ணிய மகள் காதலால் 
ஓடியதால் உளம் நொந்தவர்கள் 

மேற்கண்ட ஏதாவது ஒன்றில் 
நீங்கள் இருந்தால் 

நீங்கள் எல்லாம் 
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ..........................