28.12.13

கவிதைகளிரண்டு - 4


1)

நிசப்த முத்தமிட எண்ணி  
இட்டபின் ஒலித்த 
இச்சென்பது  
பிரபஞ்சத்துடன் ஆன்மா 
ஒத்திசைந்த 
இசையாக இருக்கலாம்............


2)

மாமா...
என்றழைத்த 
வர்ஷாக்குட்டியின் 
கண்களில் 
GEMS
தெரிந்தது .................


26.11.13

சில ஹைகூக்கள் - 4

1)

பிண ஊர்வலத்தின் 
பின்னால் 
எதிர்கால பிணங்கள் 

2)

ஆற்றின்
கொப்பூழாய்
முழு நிலா 

3)


பதினைந்தே நாட்களில்
பூப்பெய்தும்
அம்புலி

14.11.13

கவிதைகளிரண்டு - 3





1)


எனக்கு பிடித்த
எனது கவிதைகள்
எதுவுமேயில்லை 

விதை தூவிக்கொண்டு 
இருக்கிறேன் 
என்றோ முளைத்து
எவ்வாறேனும் பூத்து
என்றைக்காவது கனியும்போது
எனது மற்ற கவிதைகளும் 
எனக்கு பிடித்துப்போகுமென்ற 
நம்பிக்கையில் ,,,,,,,,,,,,,,,,,,, 


2)

தயவு செய்து
நகங்களை வெட்டாதே 
எனது மெய்யில்
அவையிடும் குறிகள்
உனது காமக்கையெழுத்து 

14.10.13

ராஜா ராணி



1)

கவிதையின் 
முதல் வரியிலிருந்து
கடைசி வரிவரை
ஏதாவது இட்டு
நிரப்பினாலும்
அந்த ஏதாவதில்
நீ மட்டுமே
இருக்கிறாய் !!!!


2) 

திசையெட்டும்
கொடி பறந்த
ராஜாவிற்கு
துரித ஸ்கலிதம்

நிலவின்
விசும்பலில்
நீள்கிறது
ராணியின்
இரவுகள்........

30.9.13

நொடிப்பிறழ்வு


நீர் வழிய 

நிறம் வெளிர

உதடுளர 

நாக்குலர 

நாசி வெம்ப 

மெய் நடுங்கும் 

மைதுன வேளையில்

கார்டெக்ஸ் இழையில்  

ஏதோ  ஒரு நொடியில் 

அவரவர் காதலிகள்

வந்து போகக்கூடும் .......

10.9.13

கவிதைகளிரண்டு - 2


1) நட்புக்கும் காதலுக்கும் 

காதலுக்கும் காமத்திற்கும் 

காமத்திற்கும் கடவுளுக்கும் 

மயிரளவுதான் இடைவெளி 

என்றாலும் 

அறுபடுதல்

மிகச்சிரமமாகத்தான் 

இருக்கிறது 


2)
சிலரின் காதலிகள் 
தெய்வமாகிறார்கள்

சிலரின் காதலிகள் 
தாயாகிறார்கள் 

சிலரின் காதலிகள் 
மனைவியாகிறார்கள் 

சிலரின் காதலிகள்
மகளாகிறார்கள் 

சிலரின் காதலிகள் 
மட்டும் 
பெயரற்ற உறவாக
நெஞ்சை பிசைகிறார்கள் 
  

17.8.13

கேசாதிபாதம்




கூந்தல் கருமுகில் 

நெற்றி பிறைநுதல்

கண்கள் கவினுரு  சேல்

பற்கள் கோ துத்தம்

முகம் சித்திரை அம்புலி 

நகில் சந்தக்குழம்பு  பருவதம் 

கொப்பூழ் பொன்னி நீர்ச்சுழி 

மருங்குல் உடுக்கை 

நிதம்பம் நறை கமலம் 

பாதம் ஆணிப்பொன் தாள் 

உன்னைத்தான் வர்ணித்துள்ளேன் 
என்றேன் .........

ஒண்ணுமே புரியவில்லை 
என்றாய் ...........

புரியாத கவிதை
எழுதுவதை இத்துடன் 
நிறுத்திக்கொள்கிறேன்...................... 

30.7.13

ஒளஷதம்



நிர்ச்சலன 
நிசப்த நொடியில் 
ஆலமரத்தடியில் 
மடியில் கிடத்தி 
உதிரம் சூடாகி 
அதரம் சுவைத்தபோது 
மயிர்க்கூச்செறிந்துன் 
பூனை முடிகள் 
குத்திய காதல் வலி 
இன்று 
பிரிவின் சீழ் 
பிடித்து நிற்கிறது 

அடுத்த பிறவியிலாவது 
ஒளஷதமாய் வா............

21.7.13

குட்டிக்கவிதைகள் - 3


1)
சிற்றிதழ் படித்து 
செவ்விலக்கியம் புனைய 
ஆசை இல்லை 

உன் 

பேரிதழ் சுவைத்து
பெருங்காமப்புராணம்
படைக்கவே ஆசை ................



2)

பிழை திருத்த சொன்னதும்
நீதான்

உரை எழுதச்சொன்னதும்
நீதான்

தலைப்பை மட்டும்
தரமறுத்தல்
எவ்விதத்தில் நியாயம் ?

1.7.13

குட்டிக்கவிதைகள் - 2


கடை வாசல் முன்பு 
சுடிதார் இறுக்கி பிடித்து 
பெருக்கும் பெண்களின் 
கைகளில் இருக்கிறது 
ஆண்களின் பார்வை ............

உலகத்திலேயே 
நீளமான 
அகண்ட 
மைதானம் இருக்கிறதென 
அவமானப்பட்டுக் கொள்ளலாம் 
காவிரி பார்த்து .............

18.6.13

சித்தப்பாக்கள்



அப்பாக்களின் எதிர் வடிவமே 
சித்தப்பாக்கள் 

அப்பா அமைதி என்றால் 
சித்தப்பா லொட லொட 

அப்பா கோபக்காரர் என்றால் 
சித்தப்பா கருணா மூர்த்தி 

அப்பா சூரியன் என்றால் 
சித்தப்பா நிலா 

பரிந்து பேசுவதிலும் 

அன்பை வெளிக்காட்டுவதிலும் 

எதை கேட்டாலும் வாங்கித்தருவதிலும் 

உற்சாகப்படுத்துவதிலும் 

தன்  உடைமைகளைத் தருவதிலும்

சித்தப்பாக்கள் இதயத்தில் நீங்காவிடம் 
பெற்றுவிடுகிறார்கள் 

அப்பாக்களும் யாரோ ஒருவருக்கு
சித்தப்பாவாய் 
இருக்கக்கூடும் 

சித்தப்பாக்களும் யாரோ ஒருவருக்கு 
அப்பாவாய் இருக்கக்கூடும் ........

16.6.13

முதற்காதல்



உன் பெயர் சுமந்த
வாகனம் செல்லும்போது 

உன் பெயருடைய குழந்தையை
யாரோ அழைக்கும் பொழுது 

உனக்கு பிடித்த பாடல்
ஒலிக்கும்போது 

ஆகாய நிறத்தில் அபூர்வமாக 
யாரவது தாவணி உடுத்தி செல்லும்போது 

ஆண்ட்ரியாவை திரையில்
பார்க்கும்பொழுது 

பேர் அண்ட் லவ்லியும் பாண்ட்ஸ் பவுடரும் 
சேர்ந்த வாசம் நுகரும்பொழுது 

தெற்றுப்பல் பெண்களை 
காணும் பொழுது 

டிஸ்கோ செயினில் மீன் டாலர் 
அணிந்த பெண்ணை 
கடக்கும் பொழுது 

சிவப்பு நிற பிஎஸ்ஏ சைக்கிள் 
செல்லும் பொழுது  

இதயத்தில் ஆசனமிட்டு 
அமர்ந்து நகர மறுக்கிறது 
மறக்கவியலா நினைவுகள் 

முதற்காதலின்  தோல்விதான் 
சுகமான சுமையாக 
இருக்கிறதெனக்கு ...........



7.5.13

இந்த நொடியில்




இந்த நொடியில் 

எங்கோ ஒரு உயிர் கபால மோட்சம் 
அடைந்திருக்கும் 

எங்கோ ஒரு உயிர் தொப்புள் கொடி அறுபட்டு
விழித்திருக்கும் 

எங்கோ ஒரு காதல் இதயம் ரணமாக 
பிரிந்திருக்கும் 

எங்கோ ஒரு காதல் பட்டாம்பூச்சியாய்  சிறகடித்து  
பறந்திருக்கும்  

எங்கோ ஒரு தற்கொலை கடனால் 
நிகழ்ந்திருக்கும் 

எங்கோ ஒரு வருமான வரித்துறையின் சோதனை 
நடந்திருக்கும் 

எங்கோ ஒரு முதிர்கன்னியின் பெருமூச்சு 
உஷ்ணமாகியிருக்கும் 

எங்கோ ஒரு அணு கருமுட்டையை 
துளைத்திருக்கும் 

எங்கோ ஒரு சொறிநாய் 
வண்புணர்ந்திருக்கும் 

எங்கோ ஒரு கொலை முறைகேடால் 
செய்யப்பட்டிருக்கும் 

எங்கோ ஒரு மரம் அரக்க மனதுடன் 
வெட்டபட்டிருக்கும் 

எங்கோ ஒரு விதை மண்ணில் 
விதைக்கப்பட்டிருக்கும்

எங்கோ ஒரு துளி மழை 
தெளிக்கப்பட்டிருக்கும் 

எங்கோ ஒருவரால் இந்த கவிதை 
படிக்கப்பட்டிருக்கும் 

18.2.13

காதல் வர்ணங்கள்


விரல் பற்றி
இறுக அணைத்தபோது 

கண்களில் சூழ்ந்த 
கருமை 

தலையணைக்குள் ஒளித்த 
தாவணி தந்தபோது 
விம்மிய முகத்தின் 
செம்மை 

வழுக்கி விழுந்த காலின் 
சுளுக்கு நீவியபோது 
மின்னலடித்த கொலுசின் 
வெண்மை 

உலர்த்திய துணிகளில் 
என் சட்டைக்கு அருகே 
தொங்கிய உன் ரவிக்கையின் 
பசுமை 

எப்போதணைத்தாலும் 
அணையாத 
உன் பார்வையின் 
நீலம் 

மறக்க நினைத்தாலும் 
மறுநொடியே தோன்றுகிறது 
உன் நினைவுகள் 
வானவில்லாய் .......................

17.2.13

காம சாகரம்


பாவியர் குருதி கலக்கின்றனர்

ரோகியர் மரணிக்கிறார்கள்

போகியர் முத்தெடுக்கின்றனர்

யோகியர் கரையிலமர்ந்து சிரிக்கின்றனர்    

காமக்கடலில்................


அதர விதைகளின் 

முத்தப் பதியன்களால்  

வியர்வை பூக்கள் 

பூக்கிறது ...... 

14.2.13

குட்டிக்கவிதைகள் - 1


அளவிடமுடியா 

ஆச்சர்ய குறிகளினூடே

மறைந்தே இருக்கிறது 

வடிவமிழந்த கேள்விக்குறி !!!  


ஈருதடுகள் உற்பவித்த 

மின்சாரம் உயிருக்குள் 

ஊடுருவி 

பிரகாசிக்கிறது 

காம  விளக்கு ....

7.2.13

ஈரம்



நிகழ்வுகளின் 

நிழலில் 

மனம் 

உலர்த்துகின்றது 

நனைந்த நினைவுகளை. 

உலர்ந்தபின் 

உணர்த்தும் 

உண்மை உறவுகள் ....

4.2.13

சில ஹைகூக்கள் - 3


சுதந்திர பறவையின் 
சிறகுகளில் 
மத சங்கிலி 

விதையின் 
தாய்ப்பால் 
மழை 

மறக்கவியலா நினைவுகளின் 
கல்லறை கல்வெட்டு 
டைரி 

22.1.13

நிகழ்காலம்


கோவிலுக்கு போனால் 
செருப்பு நினைவு 

சினிமாவுக்கு சென்றால் 
பூட்டின் சந்தேகம் 

சுற்றுலா வந்தால் 
அடுத்த மாத கடன் 

நேற்றோ நாளையோ 
எண்ணி 
நிகழ்காலத்தை 
தொலைக்கிறது 
மனது 

17.1.13

சில ஹைகூக்கள் - 2



ரோஜாக்கள் 
பள்ளி செல்கின்றன 
முட்களை சுமந்து..

பௌர்ணமி 
மறைவில் காதலர்கள் 
கறைபட்டு 
தேய்கிறது நிலா

நவரத்னங்கள் 
வெட்கின 
உன் நகரத்னம் 
கண்டு ...........