29.4.10

நோஸ்டால்ஜிக் கவிதை - 3

 நிலவைத்தேடும்  நினைவு
 

என் கவிதையின் விதை நீ
வாழ்க்கைக் கதையின் கரு நீ
எந்தன் யுகத்தின் சுகம் நீ
என் வாழ்வில் சுவைத்திராத சுவை நீ
சுகித்திராத சுகந்தம் நீ
துறவறம் கலைத்த தேவதை நீ
உன் பிரிவு
அமிர்தமும் அமிலமானது
நினைவுகள் நித்திரை கலைத்தது
உன் தழுவல்கள் உணவு தொலைந்தது
உன் சிரிப்புகள் அழ வைத்தது
உன் நினைவில், கனவில்
என் நெஞ்சம் எனை மறந்து
உனை தஞ்சம் புக எதிர்பார்க்கின்றது
வருவாயா ?
விரைவில்.........


(சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதியது )



28.4.10

நோஸ்டால்ஜிக் கவிதை - 2



பெண்கள் வருங்கால இந்தியாவின்
வளர்ச்சி தூண்கள்
 

விளக்கில் விழும் விட்டில்களல்ல
உலகின் நாகரீகத் தொட்டில்கள்
 

மின்னி மறையும் நட்சத்திரங்களல்ல
ஒளிர்ந்து வரும் நெருப்புக்கோளங்கள்
 

வர்ணிக்கப்படும் கவிதைகளல்ல
வாசிக்கப்படும் செய்தித்தலைப்புகள்
 

கண்கள் காதலுக்கு மட்டுமல்ல
சாதீயினக் கொடுமைகளின் சாடலுக்கும்தான்
 

சமுதாயப்பார்வையில் கோழைகளல்ல
சமூகத்தை சீர்திருத்தும் தங்கப்பேழைகள்
 

ஆண்டாண்டு காலமாய் பேசப்படும்
பதுமைப்பெண்களல்ல
நூற்றாண்டு கவிஞன் கண்ட
புதுமைப்பெண்கள்
 

முகவரியற்ற முகாரிகளல்ல
முகத்தைக்காட்டும் முத்துச்சிப்பிகள்
 

இழிவு செய்தால் நலிவு கொள்பவர்களல்ல
ஏழுலகம் ஏத்தும் கலியுக கவசங்கள்
 

கண்ணீர் எங்களுக்கு ஆயுதமல்ல
நாங்கள் நிராயுதபாணிகள்
 

ஏக்கங்கள் எங்களுக்கல்ல
ஆக்கத்தின் தாக்கங்கள் மட்டும்
 

நல்ல பொழுதில்
சூளுரைகளெனும் வாளுரைகளை எடுப்போம்
ஏங்கிய காலத்தை வேம்பாய் மறப்போம்
தூங்கிய காலத்தையும் தூக்கி எறிவோம்
வரதட்சிணையை வாகாய் ஒழிப்போம்
வருங்காலத்தை வளமாக்குவோம்
அடுப்பறையை விட்டு ஏடு
எடுப்பறைக்கு வருவோம்
எழுத்தறிவு பெற்று எதையும் சாதிப்போம்
பெண் சிசுக்களை திசுக்களைப்போல் காப்போம்
பெண்கள் வருங்கால இந்தியாவின்
வளர்ச்சி  தூண்கள்


( 17 ஆண்டுகளுக்கு முன் 18.04.1993 அன்று திருச்சி வானொலியில் ஒலிபரப்பான கவிதை )

 

26.4.10

உலகின் முதல் தொழில் 18+




குதப்பிய  வெற்றிலையும்
குழம்பிய மாராப்பும் 
வட்ட பொட்டும் 
வாசனை பவுடரும் 
காப்புரிமை பெற்ற 
காம தெய்வங்கள் 

முலைப்பால் கட்டியும் 
தலைப்பு விளக்கி 
தாகமடக்கும் 
தரும மகள்கள் 

சந்திரன் வன்புணர்ந்த 
கருவானமிருட்டிலும் 
இந்திரிய நெடி 
இதயம் முழுதும் 

சுருட்டி பெற்ற பணத்தில் 
மூத்தவளுக்கு முக்கா சைஸ் நோட்டும் 
சின்னவனுக்கு சுரமருந்தும் 

அவளின் வேண்டுதல் 
ஆண்டவனிடம் 
அடுத்து வர்ரவனாவது 
ஆணுரையோடு வரவேண்டும்..........

21.4.10

நோஸ்டால்ஜிக் கவிதை - 1


எங்கிருந்து வந்தாய்
என் இதயம் எனக்காக துடிக்க மறுத்து
என் நினைவு எனக்காக சிந்திக்க மறுத்து
என் வார்த்தை எனக்காக பேச மறுத்து
எல்லாம் உனக்காக என்றான போது
நீ என் இதயத்தை விட்டு
மூளையை ஆக்கிரமித்தாய்
உடலை விட்டு உயிரை சேகரம் செய்தாய்
உன்னிடம்
குழந்தையின் குறும்பு கண்டேன்
குமரியின் குழறல் கேட்டேன்
உனக்காக
உணவு மறந்து தூக்கம் தொலைந்து
கனவுகளில் நிஜமாகி போனேன்
காத்திருக்கிறேன்
நினைவுகளில் நிதர்சனமாய் வா ...


(12 வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை)

15.4.10

கற்றது காதலளவு



உன் சிணுங்கிய மொழி
தமிழ் பிடித்தது

உதிர்த்த சிரிப்பு
மின்னல் பிடித்தது

விசிறிய தாவணி
வேட்கை பிடித்தது

அசைந்த ரவிக்கை நூல்
காற்று பிடித்தது

ஒற்றிய உதடு
ஈரம் பிடித்தது

உன் பெயர்
கவிதை பிடித்தது

பற்றிய கைகள்
மின்சாரம் பிடித்தது

இறுக்கிய அணைப்பு
தியானம் பிடித்தது

நெஞ்சில் விரல் நகக்குறி
நிலா பிடித்தது

விழிகளின் ஊமை பாக்ஷை
மெளனம் பிடித்தது

எழுதிய கடிதங்கள்
கல்வெட்டு பிடித்தது

முத்துகளாய் வியர்வை
கடல் பிடித்தது

உச்சத்தில் உளறல்
காமம் பிடித்தது

ஆடையின் விடுதலை
கடவுள் பிடித்தது