26.10.10

இழுகுணி



சூரியத்துயில் மீளும் 
சேவலின் கொக்கரிப்பு 


ஓசோன் தேடும் 
வயோதிக நாசிகள் 


விநாயகனே வினைதீர்ப்பவனே
டீக்கடை


எட்டாவது படிக்க
நடப்பை எறியும் 
பேப்பர் பையன் 


இருட்டில் கறந்து 
பகலில் பாலூற்றும் 
பால்காரர் 


ஐந்து ரூபாயில்
அனைத்து விட்டமினும் 
கீரை கிழவி 


எட்டுமணிக்கும்
ஏஸி அறையில் 
போர்வையுடன் நான்............. 

20.10.10

அய்யா...................... தரும ராசாவே



பசுமை புரட்சியின்னு 
வெடியுப்பு உரம் தந்தீக 


வெண்மை புரட்சியினு 
சீமைப்பசு தந்தீக 


கலப்பை கரைசேக்காதுன்னு
டிராக்டர் கொடுத்தீக 


ஏத்தம் எரைச்ச கையில 
மோட்டார் சுச்சு வைச்சீக


கொடுக்காபுளி காணலை
கொடம்புளி பாக்கல


சிட்டுக்குருவி சிக்கல 
ஊசித்தட்டான் சுத்தல 



நுண்ணுயிர் செத்து போச்சு 
மண்ணும் காஞ்சு போச்சு 


நூறுநாள் வேலையின்னு 
விவசாயிய உயிரோட கொன்னீங்க 


கிட்டி போட்டு எலிபுடிச்சு
வெட்டி சாப்பிட்டோமுங்க


உங்க விஞ்ஞானத்துல 
ஒரு அரிசி செய்யுங்க 


காலமெல்லாம் உங்க வீட்டில் 
கால்புடிச்சு நிப்போமுங்க............................. 



9.10.10

கருட நிழல்


அதிமதுர இதழ்களின்
முத்தம் குடித்த உடல்


ஏறு அழிஞ்சில்
விதைகளாய்
ஒட்டிக்கொண்ட
நினைவுகள்


செல்லரித்த
நிழற்படம் கண்டு,
கருட நிழல்
கண்ட சர்ப்பமாய்
சிலிர்க்கும் மயிர்க்கால்கள்


சுணங்கி மார்பு
புதைத்த 
கேச சுகந்தம்


விரல்களால் 
இதயத்தில் 
வரைந்த 
உன் பெயர்  


கண்கள் குளமாகி 
கன்னத்தின் வீதியில்  
மழை வெள்ளம் 


தோற்ற காதல்
மரிக்காது
மரித்தாலும் நம் காதல்
தோற்காது..............